Motivational
* 🌹🌹🌹ஐ.டி. பணியாளர்கள், தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் தாங்கள் வேலை செய்து கொண்டிருக்கும் நிறுவனத்தைவிட்டு, புதிய நிறுவனங்களை நாடிச்சென்று பணிபுரியும்போது அவர்களுக்கு அங்கே ஏற்படும் சவால்களையும் அவற்றை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றியும் இந்தப் பதிவில் பார்ப்போம்.
தனிப்பட்ட/ தொழில்நுட்பத் திறன்கள்;
புதிய வேலை மாற்றம் என்பது உற்சாகமான ஒன்றாக இருந்தாலும் அதற்கேற்ற சவால்களும் இருக்கவே செய்யும். முந்தைய வேலைகளில் இருந்து ஏற்கனவே பெற்றுள்ள தொழில்நுட்பத் திறன்கள் மற்றும் தனிப்பட்ட திறன்களை அடையாளம் கண்டு அவற்றை புதிய வேலையில் பயன்படுத்த வேண்டும். புதிய வேலைக்கு விண்ணப்பிக்கும்போதே இவற்றை குறிப்பிட வேண்டும் மற்றும் நேர்காணலிலும் இந்த திறன்களை முன்னிலைப்படுத்தி தெரிவிக்கவேண்டும். அது உங்களைப் பற்றிய சிறந்த அபிப்பிராயத்தையும் நல்ல ஊதியத்தை அளிப்பதற்கான அஸ்திவாரம் ஆகவும் அமையும்.
புதிய விஷயங்களைக் கற்றல்;
புதிய நிறுவனத்தில் புதிய வேலைக்காக சில விஷயங்களைக் கற்றுக்கொள்ள நேரிடும். அவற்றை சின்சியராக கற்றுக்கொள்ள வேண்டும். நிறுவனம் நடத்தும் பயிற்சிப் பட்டறைகளில் கலந்துகொண்டு அதற்கான துறை சார்ந்த அறிவை பெற்றுக் கொள்ள வேண்டும். எவ்வளவு விரைவில் முடியுமோ அதை கற்றுக்கொண்டு புதிய வேலையில் உள்ள சவால்களுக்கு தயாராக தன்னை தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.
உணர்வுகளை ஒப்புக்கொள்ளுதல்;
சில சமயங்களில் இதற்கு முன்பு பார்த்த வேலைக்கும் புதிதாக ஏற்றிருக்கும் பணிக்கும் நிறைய இடைவெளிகளும் வித்தியாசங்களும் இருக்கலாம். அப்போது இவற்றை நாம் செய்யமுடியுமா என்கிற சுய சந்தேகமும் பயமும் ஏற்படும். இவை இயல்பானவை என்பதை உணர்ந்து அங்கீகரிக்க வேண்டும். இந்த உணர்வுகளை கண்டு அஞ்சவோ அல்லது தன்னைத் தாழ்வாக எண்ணவோ தேவையில்லை. இது இயல்பானது என்று அந்த உணர்வை அங்கீகரித்துக்கொள்ள வேண்டும்.
எதிர்மறை எண்ணத்தை மாற்றுதல்;
புதிய பணி முற்றிலும் மாறுபட்டதாக கடினமானதாக இருக்கலாம். “நான் இதற்கு தகுதியில்லை, தெரியாமல் இங்கு வந்து மாட்டிக்கொண்டோமோ என்கிற எதிர்மறை எண்ணத்தை முதலில் தகர்த்தெறிய வேண்டும். கடந்த கால வெற்றியை நினைத்துப் பார்த்து தன் திறமையின் மீது நம்பிக்கை வைத்து எதிர்மறை எண்ணத்தை நேர்மறையாக மாற்றிக் கொண்டு செயல்பட வேண்டும்.
சக ஊழியர்களிடையே நல்லுறவு;
உடன் பணிபுரியும் நபர்களிடம் நல்லுறவை வளர்த்துக் கொள்வது அவசியம். தானாகவே வலியச்சென்று அனைவரிடமும் அறிமுகப்படுத்திக்கொண்டு ஈகோ பார்க்காமல் பழகவேண்டும். அப்போதுதான் புதிதாக வந்த உங்களை அவர்கள் தங்களில் ஒருவனாக ஏற்றுக் கொள்வார்கள். ஏதாவது வேலையில் உதவி என்றால் தயங்காமல் செய்வார்கள். அவர்களுடன் நன்கு கலந்து பழகாமல் இருக்கும்போது சூழ்நிலை சிக்கலாகி விடலாம்.
நிபுணர்களின் உதவியைப் பெறுதல்;
புதிய நிறுவனத்தில் பணிபுரியும் நிபுணர்கள் அல்லது சீனியர்கள் போன்றவர்களின் உதவியை நாடத் தயங்ககூடாது. அவர்களது அறிவும் அனுபவமும் பெருமளவில் உதவியாக இருக்கும். மேலும் இணையத்தில் லிங்க்டின், நெட்வொர்க்கிங் நிகழ்வுகள் போன்றவற்றின் மூலமும் துறை சார்ந்த அறிவைப் பெற்றுக்கொள்ளலாம்.
நிதி சார்ந்த திட்டமிடல்;
புதிய வேலையை தேடத்தொடங்கும் முன்பு நிதி நிலைமையை ஸ்திரப்படுத்திக்கொள்ள வேண்டும். சிலர் அவசரப்பட்டு பழைய வேலையை விட்டு விட்டாலும் புதிய வேலை கிடைக்கும்வரை சமாளிப்பதற்கு ஏற்ற நிதி கையிருப்பில் இருக்க வேண்டும். அப்போதுதான் குடும்பத்தை சமாளிக்க முடியும். போதுமான நிதி ஆதாரம் என்பது மிகப்பெரிய மன பலத்தைத் தரும்.
இந்த ஏழு விஷயங்களையும் கவனத்தில் கொண்டு செயல்படுத்தினால், புதிய வேலையில் வெற்றிகரமாக கவனம் செலுத்த முடியும்.
🌹🌹🌹
#life, #motivational, #motive, #data, #update, #now, #tamil, #tamil_latest, #technology
Comments